மந்தீப் சிங்கின் தந்தை நேற்றிரவு மரணமடைந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியிருப்பது அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வாலுக்குப் பதில் மந்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அகர்வால் இடமான தொடக்க ஆட்டக்காரராகவே மந்தீப் களமிறக்கப்பட்டார்.
நேற்றிரவு தந்தை மரணமடைந்தபோதிலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அவர் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மந்தீப் சிங் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் சமயத்திலேயே அவரது தந்தை உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.