ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்!
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று(ஆக. 6) இந்தியாவுக்கு முக்கியமான நாள்...
பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று(ஆக. 6) இந்தியாவுக்கு முக்கியமான நாள். ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று(ஆக. 6) களமிறங்குகிறார். இந்திய நேரப்படி பகல் 3.20 மணிக்கு விளையாட்டு ஆரம்பமாகிறது. குரூப்-பி பிரிவில் இடம்பிடித்துள்ள நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குரூப்-ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் கிஷோர் குமார் ஜேனா பகல் 1.50 மணிக்கு ஆரம்பமாகும் தகுதிச்சுற்றுப் போட்டியில் களம் காணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றிரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய ஹாக்கி வீரர்கள் களம் காண உள்ளனர்.
பகல் 1.30 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி களம் காணுகிறது.
பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்தத்தில் 68 கிலோ எடைப்பிரிவில் நிஷா தஹியா களம் காணுகிறார்.
பகல் 2.50 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிரண் பஹல் களம் காணுகிறார்.
பகல் 3 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் வினேஷ் போகத் களம் காணுகிறார்.
இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால் மாலை 4.20 மணிக்கு ஆரம்பமாகும் காலிறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கலாம். அதில் வெற்றி பெற்றால் இரவு 10.25 மணிக்கு ஆரம்பமாகும் அரையிறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெறுவார்.
மாலை 6.13 மணிக்கு மகளிருக்கான படகு ஓட்டுதல் போட்டியும், மாலை 7.13 மணிக்கு ஆடவருக்கான படகு ஓட்டுதல் போட்டியும் நடைபெறுகிறது.