முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்க சர்ச்சை... ஒலிம்பிக் நிறைவு விழாவை புறக்கணித்த ருமேனியப் பிரதமர்!

ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு பதக்கம் மறுக்கப்பட்டதால் ஒலிம்பிக் நிறைவு விழாவை புறக்கணித்த அந்நாட்டுப் பிரதமர் மார்செல் சியோலாகு.

Updated On : 7 ஆகஸ்ட் 2024, 6:26 pm IST
ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு / ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு
பகிர்:

ருமேனிய நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு பதக்கம் மறுக்கப்பட்டதால் ஒலிம்பிக் நிறைவு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அந்நாட்டுப் பிரதமர் மார்செல் சியோலாகு தெரிவித்துள்ளார்.

ருமானியா நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு போட்டி முடிந்து வெண்கலப் பதக்கம் வாங்கவிருப்பதற்கான கொண்டாட்டத்தில் இருந்தபோது அமெரிக்க வீராங்கனை ஜோர்டன் சைல்ஸ்-ன் பயிற்சியாளர்கள் நடுவர்களிடம் புள்ளிகள் குறித்து மேல்முறையீடு செய்தனர்.

இதனால், சைல்ஸ் 0.1 கூடுதல் புள்ளிகள் பெற்று பார்போசுவின் புள்ளிகளை முந்தினார். எனவே, புள்ளிப்பட்டியலில் பார்போசு அடுத்த இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

Advertisement

Advertisement

தான் வெண்கலப் பதக்கம் வென்றதாக நினைத்த பார்போசு, கைகளில் ருமேனியக் கொடிகளை ஏந்தியபடி இருந்தார். புள்ளிப்பட்டியலில் கடைசியாக ஏற்பட்ட மாறுதலைக் கண்ட அவர், கொடியைக் கீழே போட்டுவிட்டு கண்ணீருடன் வெளியேறினார். அனா பார்போசு மற்றும் அவரது சக வீராங்கனை சப்ரினா மனேகா வொய்னா ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, “எங்கள் நாட்டு வீராங்கனைகள் ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவமானகரமாக நடத்தப்பட்டத்தைத் தொடர்ந்து, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளேன். நேர்மையாகப் பெற்ற பதக்கத்தை மேல்முறையீட்டின் மூலம் திரும்பப் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ”உங்கள் அர்ப்பணிப்பும் கண்ணீரும் எந்தப் பதக்கத்தையும் விட மேலானது. அதற்காக நமது நாடு முழுவதும் உங்களுக்குத் துணை நிற்கும்” என்று வீராங்கனைகளை ஊக்கப்படுத்துமாறு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

போட்டி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற முறையால் நடந்த தவறால் உலகம் முழுவதுமுள்ள பல கோடி மக்களும் நமது ருமேனிய மக்களைப் போல அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். நான் இதுகுறித்து மேலும் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால், தங்களின் முழுமையான தகுதியை நிரூபித்த ருமேனியப் பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக எனது எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்ய விரும்புகிறேன்” என பிரதமர் மார்செல் சியோலாகுகூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.