பல்லகெலே டெஸ்ட்: 135 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை 'ஃபாலோ ஆன்'
பல்லகெலே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108 ரன்கள் விளாசினர். இலங்கை தரப்பில் லஷன் ஸன்டகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் சேர்த்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4, அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Advertisement
இதன்காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கினார். எனவே, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இப்போட்டியில் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஏற்கனவே நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே 4-ஆவது நாளில் நிறைவுபெற்றது. தற்போது 3-ஆவது டெஸ்ட் போட்டி அதை விடவும் குறுகிய காலத்தில் நிறைவடைய அதிக வாய்ப்புள்ளது.
முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து கொழும்புவில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.