முகப்பு
செய்திகள்

கேப்டன் பதவியை துறந்தார் டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 24 ஆகஸ்ட், 2017 at 12:48 AM
பகிர்:

தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் டிவில்லியர்ஸ் கூறியிருப்பதாவது: கடந்த ஓர் ஆண்டாக எனது கேப்டன்ஷிப் குறித்து பெரிய அளவில் பேசப்பட்டது. ஊடகங்களும் ஏராளமான செய்திகளை வெளியிட்டன. எனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறேன்.
கடந்த ஆண்டுகளில் எனக்கு வழங்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்ய முயற்சித்திருக்கிறேன். தற்போதைய நிலையில் மனதளவிலும், உடலளவிலும் நான் மிகுந்த களைப்படைந்துவிட்டதாக கருதுகிறேன். இப்போது எங்களுக்கு இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவிகளில் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதை மனதில் வைத்தே நான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தேன். கடந்த 6 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்ததை மிகப்பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். எனினும் அந்தப் பதவிக்கு மற்றொருவர் வர வேண்டிய தருணம் இது. புதிய கேப்டனாக யார் தேர்வு செய்யப்பட்டாலும், அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.