செய்திகள்

ஒருநாள் போட்டி: 76 பந்துகளில் சதம் எடுத்தார் விராட் கோலி!

எழில்

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வேகமான ரன்கள் குவித்து வருகிறது. இந்திய கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி சதம் எடுத்துள்ளார். 

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான தோனி விளையாடும் 300-வது போட்டி இது. இதற்காக இந்திய கேப்டன் கோலி, தோனிக்கு ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்.

பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார் தவன். முதல் 3 ஓவர்கள் வரை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்த இந்திய அணி அதன்பிறகு தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கோலியும் ரோஹித் சர்மாவும் மாறி மாறி பவுண்டரிகள் எடுத்தார்கள். நான்காவது ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அடித்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் கோலி. 8.4 ஓவர்களில் சிக்ஸ் அடித்து இந்திய அணி 50 ரன்கள் எட்ட உதவினார் கோலி. பிறகு 38 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் கோலி. ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 45-வது ஒருநாள் அரை சதமாகும். இதற்கு முன்பு 11-வது ஓவரில் கோலி அரை சதம் எடுத்ததில்லை. 2012-ல் மிர்புரில் பாகிஸ்தானுக்கு எதிராக 16-வது ஓவரில் அரை சதம் எடுத்ததே ஓவர் அடிப்படையில் அவருடைய வேகமான அரை சதமாகும். 

13-வது ஓவரின் முடிவில் தொடர் பவுண்டரி, சிக்ஸர்களால் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

கோலிக்கு இணையாக வேகமாக ரன்கள் குவித்து வந்த ரோஹித் சர்மா, 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இதன்பிறகு தொடர் அதிரடியால் இந்திய அணி 20.2 ஒவர்களிலேயே 150 ரன்களைப் பூர்த்தி செய்தது. பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து 150 ரன்களைத் தாண்டினார்கள். 

ஆரம்பம் முதல் அசத்தலாக விளையாடி வந்த கோலி, 76 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 29-வது சதமாகும். ஒருநாள் போட்டிகளில் அவரை விடவும் சச்சின் (49), பாண்டிங் (29) மட்டுமே அதிக சதங்களை எடுத்துள்ளார்கள்.

25-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 187 ரன்கள் குவித்துள்ளது. இதே வேகத்தில் ரன்கள் எடுத்தால் இந்திய அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் நிச்சயம் 350 ரன்களைத் தாண்டிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT