இந்தியாவில் ஆடவர், மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு
ஆடவர் மற்றும் மகளிர் சீனியர் பிரிவு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியாவில் நடந்துவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆடவர் மற்றும் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தப்போவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
2018-ம் ஆண்டு மகளிர் சீனியர் பிரிவு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளும், 2021-ம் ஆண்டு ஆடவர் சீனியர் பிரிவு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளும் இந்தியாவில் நடத்தப்படும்.
Advertisement
நமது குத்துச்சண்டை வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் விதமாக இனிவரும் காலங்களில் இந்தியாவில் அதிக சர்வதேச போட்டிகள் நடைபெறும்.
இதனை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது தொடர்பாகவும் பரிசீலித்து வருகிறோம். இதன்மூலம் சர்வதேச அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர்கள் இந்தியாவில் விளையாடும் வாய்ப்பு ஏற்படும்.
இதனால் இவ்வகை போட்டிகளில் இங்கு பிரபலமாகும். சமீபத்தில் நடந்து முடிந்த இளைய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகச் சிறந்த முறையில் நடந்து முடிந்தன.
அதிலும் குறிப்பாக நமது குத்துச்சண்டை வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அவர்களது திறமை சர்வதேச அளவில் தெரியவரும். இதுவரையில் இந்தியாவில் சரியான கட்டமைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், உண்மையில் நாம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடினால் அது நிச்சயம் சாத்தியப்படும். அதுமட்டுமல்லாமல் வெற்றி, தோல்விகளை கணக்கில் கொள்ளாமல் கடினமாக பயிற்சி செய்து நம்மை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதனை ரசித்துச் செய்ய வேண்டும் என்றார்.