கௌதம் கம்பீரின் மதுபான விடுதி வழக்கு: தில்லி உயர் நீதிமன்றம் ரத்து
கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தொடர்ந்த மதுபான விடுதி தொடர்பான வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.
தில்லியில் உள்ள பிரபல DAP & Co. என்ற நிறுவனம் சொகுசு உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை நடத்தி வருகிறது. இதில், தில்லியில் செயல்பட்டு வரும் மதுபான விடுதிகளுக்கு ''இப்படிக்கு கௌதம் கம்பீர்'' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனது பெயர் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது எதிர்தரப்பு சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, கம்பீரின் வழக்கை ரத்து செய்தார்.
Advertisement
மதுபான விடுதி நிறுவனத்தின் தரப்பில் தங்களின் முதலாளியின் பெயரும் கௌதம் கம்பீர் என்பதால் அந்த பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.