4 நாள் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டி காக்: இந்தியாவுக்கு எதிராக விளையாடுவாரா?
தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் மட்டும் கொண்ட கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிஸபெத் நகரில் தொடங்கிய இப்போட்டியில் தெ.ஆ. அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
நேற்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தின்போது டி காக் வலது காலில் காயம் ஏற்பட்டது. பிறகு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் காயத்தின் தீவிரம் அறியப்பட்டது. இதனையடுத்து இந்த டெஸ்ட் போட்டியில் டி காக் மேலும் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசியபோது டி காக் கீப்பிங் செய்யவில்லை. அதற்குப் பதிலாக டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து டி காக் விலகியிருப்பது தென் ஆப்பிரிக்க ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5 அன்று தொடங்கவுள்ளது. இதற்கு குறுகிய காலமே உள்ளதால் அதற்குள் டி காக் முழு உடற்தகுதியை அடைந்துவிடுவாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் முதல் டெஸ்ட் போட்டியில் டி காக் பங்கேற்க வாய்ப்புண்டு என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.