இந்தியா, எதிரணியால் வீழ்த்த முடியாத அணியல்ல என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது இலங்கை.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆடிய இலங்கை அணியில் குணதிலகா 76, குஷல் மென்டிஸ் 89 ரன்கள் குவிக்க, அந்த அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியதாவது: இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு கட்டத்தில் நாங்கள் போதிய அளவு ரன் குவித்துவிட்டதாக நினைத்தேன். எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் அபாரமாக ஆடினர். அதனால் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அதேநேரத்தில் நாங்கள், எதிரணியால் வீழ்த்த முடியாத அணியல்ல என்றார்.
இந்த ஆட்டத்தில் தோற்றதால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நடப்பு சாம்பியனான இந்தியா. அது குறித்துப் பேசிய கோலி, "அடுத்த ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆட்டமும் காலிறுதியைப் போன்று ஆகிவிட்டது. எங்களுடைய "பி' பிரிவை எடுத்துக் கொண்டால், எல்லா அணிகளுமே தலா 2 புள்ளிகளுடன் இருக்கின்றன. எனவே எல்லா அணிகளுமே தங்களின் கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அடுத்த ஆட்டங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.