மகளிர் உலகக் கோப்பை: இந்தியா சிறப்பான தொடக்கம்!
டெர்பியில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாடி வருகின்றன.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளில் டெர்பியில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய தொடக்க வீராங்கனை மந்தனா சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இந்திய ஆண்கள் அணிக்குத் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்க ஏற்படுத்தித் தருவதில் இந்திய வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்திய மகளிர் அணி 18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்துள்ளது. மந்தனா 56, ராவுத் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஓர் ஆட்டத்தில் மோதும். குரூப் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.