சிட்னி: விலங்குகளின் புகைப்படங்களுடன் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலியின் படத்தை ஒப்பிட்டு கருத்துக்கணிப்பு நடத்திய ஆஸ்திரேலிய ஊடகத்தால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடந்த 2-வது போட்டியின் போது இரு அணி வீரர்களுக்கும் இடையே அதிக அளவு உரசல் எழுந்தது. உச்ச பட்சமாக 'டி.ஆர்.எஸ்.' முறையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பகிரங்கமாக கண்டித்து ஸ்மித் மீது குற்றம்சாட்டினார்.
இந்த பிரச்சினை இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியம் இடையேயான பிரச்சினையாக உருவெடுத்தது. பின்னர் கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆதரவாக ஊடகங்கள் களம் இறங்கின. அநேக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து எழுதி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விளையாட்டு ஊடகமான ‘பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆஸ்திரேலியா’ தனது வலைதளத்தில் ‘வெட்டல் ஆஃப் தி வீக்’ என்ற பெயரில் அமைந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் விலங்குகளுடன் விராட் கோலியின் படத்தை வைத்து கேலி செய்துள்ளது.
அதில் பிரசுரிக்கப்பட்ட நான்கு படங்களுள் பூனை, நாய் மற்றும் பாண்டா கரடி ஆகியவற்றுடன் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் பட மும் இடம் பெற்றுள்ளது. நான்கு படங்களும் ஒவ்வொரு முகப்பாவனையுடன் இருப்பது போல அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.