ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜடேஜா அரை சதம் எடுத்துள்ளார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.
ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் .
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. சாஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
கடைசி 3 நாள்களும் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது மிகவும் கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றாலொழிய இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினம் என்கிற சூழலில் இன்று காலை ஜடேஜாவும் சாஹாவும் அற்புதமாக ஆஸி.யின் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். இன்றைய நாளின் முதல் பந்திலேயே அவுட் ஆனார் ஜடேஜா. ஆனால் டிஆர்எஸ் உதவியுடன் அம்பயரின் முடிவு திரும்பப்பெறப்பட்டது. இதை ஜடேஜா சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸ், பவுண்டரி என ஆஸி.க்குத் தக்க பதிலடு கொடுத்தார். ஜடேஜா - சாஹா கூட்டணி இந்த ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்து ஆஸி.யின் திட்டங்களை முறியடித்தார்கள்.
ஜடேஜா 83 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். இதனால் இந்திய அணி 109 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்து 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை ஜடேஜா - சாஹா கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.