இந்த டெஸ்ட் தொடரில்தான் எத்தனைவிதமான கருத்துமோதல்கள்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். இதையடுத்து டிஆர்எஸ் மூலம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், அதன்பிறகு "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார். அதற்கு இந்திய கேப்டன் கோலி எதிர்ப்புத் தெரிவிக்க, ஸ்மித் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, ஸ்மித் மீது கடுமையாக சாடினார். ஆனால் ஸ்மித்தோ, குழப்பமான மனநிலையில் அதுபோன்ற தவறை செய்துவிட்டேன் என கூறினார். எனினும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியதாவது: ஐசிசி ஒரு நாட்டுக்கு ஆதரவாக நடந்துகொள்ளக் கூடாது. ஸ்மித் செய்ததை இந்திய வீரர் செய்தாலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது. 3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கு அவுட் கொடுக்கும்போது ஓய்வறையை நோக்கிப் பார்த்து விராட் கோலி உதவி கோரவேண்டும் என நான் விரும்புகிறேன். விராட் கோலி அப்படிக் கேட்கும்போது ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கவேண்டும். ஸ்மித்தின் நடவடிக்கையை ஐசிசியின் விதிமுறைகளை மீறிய ஒன்றாக ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட் பார்க்கவில்லை. தற்போது ஐசிசியின் நிலைப்பாடு பிசிசிஐ, கோலியை அவமதிப்பதாகவே உள்ளது என்றார்.
இதையடுத்து இரு நாட்டு வாரியங்களும் அறிக்கைகள் மூலம் மோதிக் கொண்டன. அதைத் தொடர்ந்து ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் மீது ஐசிசியிடம் புகார் அளித்தது பிசிசிஐ. இதன்பிறகு பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி சுதர்லேன்ட் ஆகியோர் சந்தித்து இந்த விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் மீதான புகாரை பிசிசிஐ திரும்பப் பெற்றது.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் கோலியின் காயத்தை ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் கிண்டல் செய்தார். அப்போட்டியின்போது மேக்ஸ்வெல், கோலி போலவே பாய்ந்து சென்று ஃபீல்டிங் செய்தார். அப்போது அவர் கோலியைப் போலவே வலது தோள்பட்டையில் கை வைத்து சிரித்தபடி கோலியின் காயத்தைக் கேலி செய்தார். இதுதவிர கோலி பெவிலியன் திரும்பும்போது ஆஸி. கேப்டன் ஸ்மித்தும் வலது தோள்பட்டையில் கை வைத்து கோலியைக் கிண்டல் செய்யும் விதத்தில் நடந்துகொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இதில் ஸ்மித் அதுபோல செய்யவே இல்லை என்றாலும் அதுபோன்ற தவறான செய்திகள் உடனே ரசிகர்களிடம் சென்றன. பதிலுக்கு கோலியும் அதுபோல செய்கை செய்து பழிக்குப் பழி வாங்கினார்.
தர்மசாலா டெஸ்டுக்கு முன்பு, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அந்த அணியினர், தர்மசாலாவில் உள்ள திபெத்திய மத குருவான தலாய் லாமாவை அவரது மடத்தில் சந்தித்தனர். இச்சந்திப்புக்குப் பிறகு ஸ்மித் பேசிய ஸ்மித், 'தலாய் லாமாவுடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. நிம்மதியாக உறங்குவது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் என்னை அருகில் அழைத்து ஆசி வழங்கினார். அவரது அந்த ஆசிகள், அடுத்த 5 நாள்களுக்கு எனக்கு நிம்மதியான உறக்கத்தை தரும் என நம்புகிறேன்' என்று கூறினார். அந்தளவுக்கு டெஸ்ட் தொடர் ஸ்மித்துக்குக் கடும் அழுத்தத்தை அளிப்பதாக இருந்தது.
பலசமயங்களில் இரு அணி வீரர்களும் பேட்டிங் செய்ய வருகிறபோது பந்துவீச்சாளர்கள், கீப்பர், ஃபீல்டர்களின் கேலி, கிண்டல்களைச் சந்திக்க நேர்ந்தது.
ஒருவழியாக தொடர் முடிவடைந்துவிட்டது. இந்திய அணி கடுமையாகப் போராடியே 2-1 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
போட்டி முடிவடைந்தபிறகும் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டு இருக்கமுடியுமா?
பரிசளிப்பு விழாவில் ஆஸி. அணியை வெகுவாகப் புகழ்ந்தார் கோலி. அதேபோல ஸ்மித்தும் இந்திய அணியைத் தாராளமாகப் பாராட்டினார்.
சிலசமயங்களில் நான் உணர்வுகளை இழந்துவிட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதோடு மட்டுமில்லாமல் இந்த டெஸ்டின் இந்திய கேப்டனான ரஹானேவிடம், ஓய்வறையில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பீர் அடிக்கலாமே என்று கேட்டுள்ளார். இத்தகவலை ஆஸி. ஊடகமான ஏபிசி-யின் அலிஸ்டர் நிகோல்ஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆல் ஈஸ் வெல்! ஆல் ஈஸ் வெல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.