குஜராத் அணியின் கடைசி 3 ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் நட்சத்திர வீரர் மெக்கல்லம்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ். இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது டெல்லி. இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் குஜராத்தின் அடுத்தச் சுற்று கனவு கலைந்தது.
இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக மெக்கல்லம் அறிவித்துள்ளார். இதையடுத்து குஜராத் - மெக்கல்லம் இடையேயான உறவு இத்துடன் முடிந்தது. அடுத்த வருட ஐபிஎல்-லில் குஜராத் அணி இடம்பெறப்போவதில்லை. குஜராத், புணே அணிகளுக்குப் பதிலாக சென்னை, ராஜஸ்தான் அணிகள் அடுத்த வருட ஐபிஎல்-லில் இடம்பெறப்போகின்றன. எனவே அடுத்த வருடம் புதிய அணியில் இடம்பெறுவார் மெக்கல்லம். இந்த வருட ஐபிஎல் போட்டியில், 11 ஆட்டங்களில் 319 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது மெக்கல்லமின் விலகலால், குஜராத் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். டுவைன் ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச், ஜேம்ஸ் ஃபாக்னர், சிராக் சுரி. இந்த நான்கு பேரும் அடுத்தப் போட்டியில் இடம்பெறுவார்களா இல்லை, இந்திய வீரருக்குக் கூடுதல் இடம் கிடைக்குமா என்பது பஞ்சாப்புக்கு எதிரான நாளைய போட்டியில் தெரியவரும்.