சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் கடைசி பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியை பொறுத்தவரையில், நியூஸிலாந்துடனான தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. மறுபுறம், வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.
இந்திய அணி பேட்டிங் வரிசையை பொறுத்தவரை, தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் பயிற்சி ஆட்டத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கினார். ஆனால் அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த ரஹானே 11 ரன்களில் வெளியேறினார்.
முதல் பயிற்சி ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்த தவன், இந்தமுறை அரை சதம் எடுத்தார். பிறகு 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக தினேஷ் கார்த்திக்கும் அரை சதம் எடுத்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடியவர் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக 35-வது ஓவரின் முடிவில் 94 ரன்களில் ரிடையர்ட் அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
முதல் பயிற்சி ஆட்டத்தில் மழையின் காரணமாக மிடில் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனவே, இந்த ஆட்டத்தில் அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த 2-வது பயிற்சி ஆட்டத்தைக் கொண்டு சாம்பியன்ஸ் டிராபியில் களம் காண உள்ள இந்திய அணியின் "பிளேயிங் லெவன்'-ஐ முடிவு செய்யலாம்.