நான் விளையாடவோ, விலகவோ தேர்வாளர்கள் அனுமதி தேவையில்லை
தேர்வாளர்கள் அனுமதி பெற்று நான் விளையாட வரவில்லை; அவர்கள் அனுமதி பெற்று நான் ஓய்வுபெறவும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.
தேர்வாளர்கள் அனுமதி பெற்று நான் விளையாட வரவில்லை; அவர்கள் அனுமதி பெற்று நான் ஓய்வுபெறவும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.
"நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் நெஹ்ரா பங்கேற்பது உறுதி இல்லை. அதுதொடர்பாக நெஹ்ராவிடம் தெரிவிக்கப்பட்டது" என்று இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே. பிரசாத் கூறியிருந்தார். நெஹ்ராவுக்கான பிரியாவிடை ஆட்டமாக முதல் டி20 இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக நெஹ்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
அந்த விவகாரம் தொடர்பாக தேர்வுக் குழு தலைவர் என்னிடம் பேசவில்லை. முன்னதாக எனது ஓய்வு முடிவு குறித்து கோலியிடம் கூறினேன். "நீங்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடலாம். வீரர் மற்றும் பயிற்சியாளராக தொடரலாம்" என்று யோசனை அளித்தார். ஆனால், முற்றிலும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துவிட்டேன்.
பிரியாவிடை ஆட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அதிருஷ்டவசமாக அந்த ஆட்டம் தில்லியில் நிகழ்ந்துவிட்டது. எனது கடின உழைப்புக்கு கடவுள் கொடுத்த அன்பளிப்பு இது. இந்த விவகாரத்தில் அணி நிர்வாகம் சார்பில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசினேனே தவிர, தேர்வாளர்கள் எவரிடமும் பேசவில்லை. நான் விளையாட வரும்போது தேர்வாளர்கள் அனுமதி பெறவில்லை. அவர்கள் அனுமதி பெற்று ஓய்வுபெறவும் இல்லை என்று நெஹ்ரா கூறினார்.