நாகலாந்து - மணிப்பூர் மகளிர் அணிகளுக்கு இடையிலான U-19 போட்டியில் 136 வைட்கள் வீசப்பட்டுள்ளன.
பிசிசிஐ மகளிர் U-19 வடகிழக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் நாகலாந்து - மணிப்பூர் அணிகள் மோதின. முதலில் விளையாடிய நாகலாந்து மகளிர் அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய மணிப்பூர் அணி 27. 3 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நாகலாந்து அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உண்மையில் இரு அணிகளுக்கு இடையே வைட்கள் வீசுவதில்தான் பலத்த போட்டி நிலவியது. மணிப்பூர் அணி 94 வைட்கள் வீசியது. பிறகு பந்துவீசிய நாகலாந்து, 42 வைட்கள் வழங்கியது. ஆக மொத்தம் இரு அணிகளும் சேர்த்து 136 வைட்கள் வீசின. இச்செய்தி சமூகவலைத்தளங்களில் பரவியதால் இப்போட்டிக்குக் கவனம் கிடைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் முதல்முறையாக மகளிர் U-19 போட்டிகளில் பங்கேற்கின்றன. இதனால் அவர்களால் விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்துவீச முடியவில்லை என்று போட்டியை நேரில் பார்த்த அதிகாரி கருத்து தெரிவித்தார். முறையாகப் பயிற்சி அளித்தால் நிச்சயம் இதுபோன்ற குறைகளைக் களையமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.