இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, நியூஸிலாந்துடனான முதல் டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார்.
நியூஸிலாந்துடனான 2-ஆவது டி20 போட்டியில் அறிமுகம் கண்ட முகமது சிராஜின் பந்துகள் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விளாசப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியில் விளையாடி வரும் மற்றொரு இளம் பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
முகமது சிராஜ் தற்போதுதான் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் இது அவருடைய முதல் போட்டியாகும். எனவே இந்த சூழ்நிலைகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள சற்று நேரமாகும். அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் மட்டுமே அவருக்கு போதிய அனுபவம் ஏற்படும்.
இந்தப் போட்டியின் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. எனவே இதில் பந்துவீசுவது சற்று கடினமாகவே இருந்தது. இதில், சிராஜுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆட்டத்தின் நடுவே நான் சில அறிவுரைகளை வழங்கினேன்.
எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவது சற்று சவாலான காரியம் தான். இனி வரும் காலங்களில் சிராஜ் நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவார். தோல்விகளில் இருந்து நாம் எவ்வாறு மீண்டு வருகிறோம் என்பது தான் முக்கியம். அந்தப் பாடம் சிராஜுக்கும் நன்றாகத் தெரியும் என்றார்.