ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் 292/3
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒடிஸா அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாளில் தமிழக அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒடிஸா அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாளில் தமிழக அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அனியின் தொடக்க வீரர்களாக கேப்டன் அபினவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் அபினவ் முகுந்த் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஜகதீசன் களம் காண, மறுமுனையில் சதம் கடந்தார் முரளி விஜய். 273 பந்துகளில் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 140 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய், சூர்யகாந்த் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து இந்திரஜித் களம் காண, அரைசதம் கடந்த ஜகதீசன் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 88 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வர 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது தமிழகம். இந்திரஜித் 41, விஜய் சங்கர் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர். ஒடிஸா தரப்பில் சூர்யகாந்த், கோவிந்தா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.