கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் பி.வி.சிந்து 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிடானியை தோற்கடித்தார்.
1 மணி, 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார் சிந்து. தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது செட்டில் அபாரமாக ஆடிய மிடானி, அதை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் சிந்து அபாரமாக ஆட, அவரை சமாளிக்க முடியாமல் மிடானி தடுமாறினார். இதனால் அந்த செட்டை சிந்து 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
மிடானியுடன் 3-ஆவது முறையாக மோதியுள்ள சிந்து, 2-ஆவது முறையாக அவரை வீழ்த்தியுள்ளார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது அரையிறுதியில் சீனாவின் பிங் ஜியாவை சந்திக்கிறார். பிங் ஜியாவ் தனது காலிறுதியில் 21-7, 21-13 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் ஜீ ஹியூனை தோற்கடித்தார்.
சமீர் வர்மா தோல்வி: அதேநேரத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சமீர் வர்மா 22-20, 10-21, 13-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வானிடம் தோல்வி கண்டார்.