இலங்கை வீரர்கள் மூச்சுத்திணறலால் அவதி: மூவர் வெளியேறியதால் மைதானத்தில் சலசலப்பு, இந்தியா டிக்ளேர்
தில்லியில் நடைபெற்று வரும் 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் செயல்பாடுகளைக் கண்டு இந்திய கேப்டன் விராட் கோலி கோபமடைந்தார்.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், விராட் கோலி ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. முதல்நாள் ஆட்டநேர இறுதியில் முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த விராட் கோலி, இரட்டைச் சதம் விளாசினார். மேலும், நடப்புத் தொடரிலேயே அடுத்தடுத்து 2 இரட்டைச் சதங்களை விளாசி புது சாதனையும் படைத்தார்.
Advertisement
இந்நிலையில், இலங்கை வீரர்கள் மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இலங்கை வீரர்கள் அனைவரும் முகமுடி அணிந்து விளையாடினர்.
இந்த பாதிப்பு காரணமாக இலங்கையின் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களான காமாகே, லக்மல் மற்றும் சடீரா ஆகிய மூவரும் களத்தில் இருந்து வெளியேறினர். இதன்காரணமாக மைதானத்தில் சலசலப்பு நிலவி வருகிறது.
இச்சம்பவங்களை அடுத்து கோபமடைந்த விராட் கோலி இந்திய அணி டிக்ளெர் செய்வதாக அறிவித்தார். களத்தில் இருந்த சாஹா 9*, ஜடேஜா 5* ஆகியோரை திரும்ப வருமாறு அழைத்தார்.
இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 25 பவுண்டரிகளை விளாசி 243 ரன்களைக் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது அதிகபட்சமாகும்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. துவக்க வீரர் கருணரத்னே ஷமி பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்-அவுட்டாகி வெளியேறினார்.