ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் நசிர் ஜம்ஷெத்துக்கு 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நசிர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் இருந்தன. அதனை விசாரித்த ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், ஐந்து குற்றங்களை அவர் செய்துள்ளதாகத் தீர்ப்பு கூறியுள்ளது. இதையடுத்து இவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கடந்த வருடம் நசிருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை நசிர் மறுத்தார். இதையடுத்து இவர் மீதான குற்றச்சாட்டுகளை வாரியத்தின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை செய்தது. ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் வீரர் அக்யூப் ஜாவத், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மசூத் கொண்ட மூவர் குழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், ஃபிக்ஸிங் தொடர்பாக இதர வீரர்களை நசிர் அணுகியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 10 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடக்கூடாது என்பது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிர்வாகத்திலும் அவர் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017 பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டு தண்டனை பெறும் ஆறாவது வீரர், நசிர் ஜம்ஷெத். ஆறு வீரர்களில் இவருக்குத்தான் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாடுட்டுகளில் ஷர்ஜீல் கான், காலித் லதிஃப், முகமது நவாஸ், முகமது இர்ஃபான், ஷஸாயிப் ஹசன் ஆகிய வீரர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அந்நாட்டு வீரர் ஷாஸைப் ஹசனுக்கு 12 மாதம் தடை விதிக்கப்பட்டது.
நசிர் ஜம்ஷெத், 2 டெஸ்டுகளிலும் 48 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.