2019-ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரிட்டனின் ஆன்டி முர்ரே உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடன், நடப்புச் சாம்பியன்களான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோரும் பங்கேற்பதை அடுத்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான எதிர்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மகப்பேறுக்குப் பிறகு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளில் பங்கேற்ற செரீனாவால் அதில் வெற்றிக் கனியை பறிக்க இயலவில்லை. எனவே, மீண்டும் தனது முத்திரையை பதிக்கும் முனைப்புடன் இப்போட்டியில் அவர் பங்கேற்கிறார்.
இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள செரீனா, இப்போட்டியின் மூலம் 24-ஆவது பட்டம் வென்று ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும் முயற்சியில் உள்ளார்.
ஆடவர் பிரிவில், காயத்திலிருந்து மீண்டு வரும் உலகின் 2-ஆம் நிலை வீரரான நடால், முர்ரே ஆகியோரும் பங்கேற்கின்றனர். மொத்தமாக ஆடவர் பிரிவில் 101 பேர், மகளிர் பிரிவில் 102 பேர் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.