ரஞ்சி கோப்பை நடப்பு சீசனில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. கேரளத்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 6 புள்ளிகளையும் பெற்றது.
எலைட் பி பிரிவில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக அணி முதல் இனனிங்ஸில் 268 ரன்களையும், கேரளம் 152 ரன்களையும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களுடன் தமிழகம் டிக்ளேர் செய்தது. கேப்டன் பாபா இந்திரஜித் அபாரமாக ஆடி 92 ரன்களை விளாசினார். ஓபனர் கெளஷிக் காந்தி 59 ரன்களை எடுத்தார்.
369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளம் தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கியது. சஞ்சு சாம்சன் 91, சிஜிமோன் ஜோசப் 55 ஆகியோர் அபாரமாக ஆடி மூன்றாவது விக்கெட்டுக்கு 93 ரன்களை குவித்தனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை 27/1 என கேரளம் தனது ஆட்டத்தை தொடங்கியது.
ஆனால் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்தது 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நடராஜன் 5 விக்கெட்: நடராஜன் அபாரமாக பந்துவீசி 41 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் கேரளத்தை வீழ்த்தி தமிழகம் சீசனின் முதல் வெற்றியை பெற்றது. இதன் மூலம் 6 புள்ளிகளும் கிடைத்தன. பி பிரிவில் தமிழகம் மொத்தம் 11 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளது. மத்தியப்பிரதேசம் 18, கேரளம் 13 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
மொஹாலியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹிமாச்சலப்பிரதேச அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 7 புள்ளிகளை பெற்றது.
புதுதில்லியில் நடைபெற்ற ஆந்திரம்-தில்லி இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. நட்சத்திர வீரர் கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் இது அவரது கடைசி ஆட்டமாக அமைந்தது.
ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஒடிஸாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் வென்றது.
புணேயில் நடைபெற்ற மகாராஷ்டிரம்-மும்பை இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. மகாராஷ்டிரம் 3, மும்பை 1 புள்ளிகளைப் பெற்றன.