தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும் அந்த தொடரில் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் 4-ஆவது போட்டியிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்த தொடரிலும் விராட் கோலி 2 சதங்கள் அடித்துள்ளார். குறிப்பாக 3-ஆவது போட்டியில் சதமடித்ததுடன் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் விராட் கோலி.
அதில், தென் ஆப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், இந்திய கேப்டன்களில் அதிக சதமடித்தவர், தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர், ஒரு இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த 2-ஆவது கேப்டன் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் உலகில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. டேவிட் வார்னர், மைக்கெல் வான் உள்ளிட்ட வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவ்வரிசையில் ஒருநாள் போட்டியின் தலைசிறந்த வீரர் விராட் கோலி. இவருக்கு எதிராக பந்துவீசுவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. தலைசிறந்த திறமைசாலி என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.