முகப்பு
செய்திகள்

'தேசியக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்'- ஐஸ் கிரிக்கெட்டில் மனதை உருக்கிய ஷாகித் அஃப்ரிடி 

இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடிக்குமாறு ஷாகித் அஃப்ரிடி கூறியது அவருக்கு இந்தியர்களிடையே பெரும் மரியாதையை ஏற்படுத்தி வருகிறது.

Updated On : 11 பிப்ரவரி, 2018 at 3:33 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM

சுவிட்சர்லாந்து நாட்டின் செயின்ட் மோர்டிஸ் பகுதியில் முதன்முறையாக ஐஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் விரேந்திர சேவாக் தலைமையிலான அணியும், ஷாகித் அஃப்ரிடி தலைமையிலான அணியும் மோதின. இறுதியில் அஃப்ரிடி அணி வெற்றிபெற்றது.

இருப்பினும் இந்த போட்டியின் போது அஃப்ரிடி செய்த காரியம் இந்தியர்களிடையே அவருக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி வருகிறது. போட்டியின் போது அங்கிருந்த இந்திய ரசிகை ஒருவர் அஃப்ரிடி உடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினார்.

இந்நிலையில், தான் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை மடித்து வைத்திருந்தார். உடனே இதைக் கண்ட அஃப்ரிடி, இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடிக்குமாறு கூறி பின்பு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  

Advertisement

மேலும் இந்திய கேப்டன் விராட் கோலி உடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர், கிரிக்கெட் விளையாட்டின் முகவரி. நான் எவ்வாறு பாகிஸ்தானில் பிரபலமோ, அதுபோன்று தான் இந்தியாவுக்கு விராட். சக மனிதருக்கு மரியாதை தரக்கூடியவர். என்னுடைய அறக்கட்டளைக்கு அவரது ஆட்டோகிராஃப் உடன் கூடிய ஜெர்ஸியை வழங்கியுள்ளார்.

நான் அவருடன் பேசும்போது எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கக்கூடியவர். அவ்வாறு பேசிக்கொள்ள நேரம் இல்லாத போது மெஸேஜ் அனுப்பிக்கொள்வோம். கிரிக்கெட் வீரர்களாக எங்களால் எப்படி இருவருக்கு இடையில் பரஸ்பர ஒற்றுமையுடன் நல்லுறவு காப்பது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளோம்.

பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா, ஆஸ்திரேலியாவில் தான் எனக்கு அதிக அன்பு கிடைத்துள்ளது. தோனியுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது. தோனி களத்தில் எப்போதும் அமைதியாக செயல்படக்கூடியவர், விராட் கோலி ஆக்ரோஷமானவர் அதுதான் அவர்களின் பலம்.

அவ்வகையில் விராட் கோலி சிறப்பாகவே செயல்படுகிறார். ஒருவரின் இயல்பை எளிதில் மாற்றிவிட முடியாது. ஆக்ரோஷமாக செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி மிகப்பெரிய சொத்து. அவர் இந்திய அணியை நிச்சயம் பல உயரங்களுக்கு வழிநடத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு வீரரின் சோதனைக் காலங்களில் அவருக்கு எதிராக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமரிசனங்களை நான் எப்போதும் ஏற்பதில்லை. வெற்றிபெறும் வரை வாழ்த்துப் பாடி விட்டு, தோற்ற பின் தாக்குவது சரியானதல்ல. ஒவ்வொரு வீரரின் கடந்த கால வரலாற்றை ஊடகங்கள் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் அந்த வீரர் மீண்டெழுந்து வருவார் என்பது தெரியவேண்டும். விராட் கோலிக்கும் எனக்குமான நட்புறவை எந்த அரசியல் சக்தியாலும் பிரிக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.