செய்திகள்

ஸ்மித், வார்னருக்கு ஒரு வருடம் தடை: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை!

எழில்

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸி. கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் ஆகியோருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

கடந்த 1-ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்பட அந்நாட்டில் பல்வேறு தரப்புகளிலிருந்து இவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளும் அவர்களை கடுமையாக சாடி முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகிய மூவரும் உடனடியாகத் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தாயகம் திரும்பவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் அறிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகிய மூவரும்தான் பந்தைச் சேதப்படுத்துவது குறித்து திட்டமிட்டிருக்கிறார்கள். ஸ்டார்க், ஹேஸில்வுட், லயன் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களுக்கு அவர்களுடைய திட்டம் குறித்து தெரியாது. பயிற்சியாளர் லேமனுக்கு இதுகுறித்து தெரியாது. எனவே அவர்மீது நடவடிக்கை இல்லை. அவருடைய ஒப்பந்தம் நீடிக்கிறது என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் இன்று ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவுள்ளார்கள்.

இதையடுத்து ரென்ஷாவுடன் சேர்த்து கிளென் மேக்ஸ்வெல், ஜோ பர்ன்ஸ் ஆகிய 3 வீரர்கள் ஆஸி. அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மூன்றாவது டெஸ்டின் கடைசி நாளன்று ஆஸி. அணியின் கேப்டனாகச் செயல்பட்ட டிம் பெயின், கடைசி டெஸ்டிலும் கேப்டனாகச் செயல்படுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாகியுள்ளார் பெயின்.

இந்நிலையில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸி. கேப்டன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடமும் பேன்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் மூவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாகச் செயல்பட ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு இரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸி. கேப்டன் ஸ்மித் இன்று ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவுள்ளார். சிட்னிக்குச் சென்றபிறகு அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, வெள்ளியன்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT