ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு
ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பார்வையாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து மைதானத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிலையல், அந்த மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பார்வையாளர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேர்க்கவில்லை.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, கூறியதாவது:
Advertisement
இந்த புனித ரம்ஜான் மாதத்தில் கூட பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதை நிறுத்தவில்லை. தற்போது மக்கள் நிறைந்த விளையாட்டு அரங்கில் இதுபோன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்டதன் மூலம் அவர்கள் மனிதத்துக்கு எதிரானவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றார்.
கடந்த வருடம் தான் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதையடுத்து தங்களின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக வருகிற ஜூன் மாதம் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.