சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் (வயது 34) புதன்கிழமை அறிவித்தார். திடீரென சமூக வலைதளத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். இது மிகவும் கடினமான முடிவாகும் என்றார்.
இந்நிலையில், டி வில்லியர்ஸின் இந்த அதிர்ச்சியான முடிவுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில், டி வில்லியர்ஸ் ஓய்வால் உலக கிரிக்கெட் வறுமையில் வாடுவதாக சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது:
உலக அளவில் அதிகம் நேசிக்கப்பட்ட, மிகவும் மகத்தான கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்ட ஏபி டி வில்லியர்ஸுக்கு வாழ்த்துகள். நீங்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தால் உலக கிரிக்கெட் வறுமையில் வாடுகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் நீங்கள் என்றென்றும் கொண்டாடப்படுவீர்கள் என்றார்.
களத்தில் உங்களுடைய 360 டிகிரி ஆட்டத்தைப் போலவே வாழ்கையிலும் 360 டிகிரியில் வெற்றிகள் குவியட்டும். கிரிக்கெட் உலகம் நிச்சயம் உங்களை இழக்கிறது, உங்கள் எதிர்காலத்துக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.
உன்னுடன் விளையாடும் தருணத்தை இழக்கிறேன் நண்பனே. களத்தில் நம்மிருவரிடையேயான பார்ட்னர்ஷிப் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். நமது அணிக்காக நாம் இருவரும் இனி இணைந்து விளையாட மாட்டோம் என்பதை நினைக்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது. களத்தில் நிச்சயம் உன்னை இழக்கிறேன் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸிஸ் பதிவிட்டுள்ளார்.
114 டெஸ்டுகளில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், 8765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 சதங்களும் 46 அரை சதங்களும் அடங்கும். 228 ஒருநாள் ஆட்டங்களில் 9577 ரன்களும் 78 டி20 ஆட்டங்களில் 1672 ரன்களும் எடுத்துள்ளார்.