உலக துப்பாக்கி சுடுதல்: ஜூனியர் பிரிவில் 2 தங்கம்
தென் கொரியாவில் நடைபெறும் 52-ஆவது ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. எனினும், சீனியர் பிரிவில்
சாங்வோன்: தென் கொரியாவில் நடைபெறும் 52-ஆவது ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. எனினும், சீனியர் பிரிவில் மூத்த வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினர்.
2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவதற்கான முதல் தகுதிப்போட்டி இதுவாகும். இப்போட்டியின் மூலமாக 60 வீரர், வீராங்கனைகள் தகுதிபெறலாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் ஜூனியர் ஆடவர் தனிநபர் 50 மீ பிஸ்டல் பிரிவில் அர்ஜுன் சிங் சீமா தங்கம் வென்றார். அப்பிரிவில் கெளரவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அர்ஜுன், கெளரவ் ராணா, அன்மோல் ஜெயின் ஆகியோர் அடங்கிய இந்திய குழு, அணிகள் பிரிவில் 1659 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.
சீனியர் பிரிவில், கலப்பு அணிகளுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவு தகுதிச்சுற்றில் அபூர்வி சந்தேலா-ரவி குமார் இணை 7-ஆம் இடம் பிடித்தன. அதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய அணியான தீபக் குமார்-மெஹுலி கோஷ் இணை, 25-ஆம் இடம் பிடித்தது. கலப்பு அணிகள் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சித்து-ஷாஸார் ரிஸ்வி இணை தகுதிச்சுற்றில் 10-ஆம் இடம் பிடித்தது. மற்றொரு இந்திய இணையான மானு பேக்கர்-அபிஷேக் வர்மா, 12-ஆம் இடம்
பிடித்தனர்.