ஒரு வாரத்தில் திரும்புவார் தீபா
இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், மூட்டுவலி காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில் அவர் ஒரு வாரத்தில் பயிற்சிக்குத் திரும்புவார் என்று அவரது பயிற்சியாளர் விஷ்வேஷ்வர் நந்தி கூறியுள்ளார்.
புது தில்லி: இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், மூட்டுவலி காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில் அவர் ஒரு வாரத்தில் பயிற்சிக்குத் திரும்புவார் என்று அவரது பயிற்சியாளர் விஷ்வேஷ்வர் நந்தி கூறியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸில், ஆர்ட்டிஸ்டிக் அணிகள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய குழுவில் தீபாவும் இருந்தார். பயிற்சியின்போது வலது கால் மூட்டுப் பகுதியில் வலி ஏற்பட்டதால் அந்தப் போட்டியிலிருந்து விலகினார்.
எனினும், பேலன்ஸிங் பீம் பிரிவில் இறுதிச்சுற்றில் விளையாடிய அவர், அதில் 5-ஆம் இடம் பிடித்தார். இதையடுத்து கடந்த வாரம் நாடு திரும்பிய தீபா மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டார். தற்போது வலியிலிருந்து மீண்டு வரும் அவர், ஒரு வாரத்தில் பயிற்சிக்கு திரும்பவார் என்று அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார்.
தோஹாவில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு தீபா தயாராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.