ஆசிய கிளப் வாலிபால் போட்டியில் புரோ வாலிபால் லீக் சாம்பியன் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கலந்து கொள்கிறது என இந்திய வாலிபால் சம்மேளன செயல் அலுவலர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் விஎஃப்ஐ மற்றும் சோனி நிறுவனம் சார்பில் நடைபெற்ற புரோ வாலிபால் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி இறுதி ஆட்டத்தில் காலிக்கட் ஹீரோஸ் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் எஃப்ஐவிபி ஆசிய கிளப் வாலிபால் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியும் கலந்து கொள்கிறது.
சென்னையில் சனிக்கிழமை ஸ்பார்டன்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஎஃப்ஐ செயல் அலுவலர் மிஸ்ரா கூறியதாவது:
அடுத்த ஆண்டு சீசன் முதல் புரோ வாலிபால் லீகில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. அதோடு மகளிர் புரோ வாலிபால் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மிஸ்ரா.