முகப்பு
செய்திகள்

என் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: விராட் கோலி

என்னுடைய பேட்டிங் மற்றும் எதையும் நான் மற்றவருக்கு நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:45 AM
பகிர்:

உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு சதமும் விராட் கோலியால் எடுக்க முடியவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களிலும் 19, 28 எனக் குறைந்த ரன்களே எடுத்தார். எனினும் 3-வது டி20 ஆட்டத்தில் 45 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் விமரிசகர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளாரா?

3-வது டி20 ஆட்டம் குறித்து விராட் கோலி பேசியதாவது:

என்னுடைய பேட்டிங் மற்றும் எதையும் நான் மற்றவருக்கு நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. என் அணிக்காகப் பங்களிக்க விரும்புகிறேன். என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக நான் விளையாடுவதில்லை. நான் 20, 30, 40, 50 ரன்கள் எடுக்கிறேனா என்பதை விடவும் என் அணி இலக்கை அடையவேண்டும் என்பதே விருப்பம். இப்படித்தான் 11 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எனவே எனக்கு எதுவும் புதிது அல்ல, எந்த அழுத்தமும் எனக்குக் கிடையாது என்று கூறியுள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது. 

இந்திய அணி ஏற்கெனவே முதல் இரு டி20 ஆட்டங்களையும் வென்ற நிலையில் 3-வது டி20 ஆட்டம் கயானா பிராவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் 146/6 ரன்களைச் சேர்த்தது. பொல்லார்ட் 58, ரோவ்மேன் 32 ரன்களை விளாசினர். பின்னர் ஆடிய இந்தியா 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு ரன்களை 150 சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் 2 ஆட்டங்களில் சோபிக்காத இளம் வீரர் ரிஷப் பந்த் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி  6 பவுண்டரியுடன் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வியாழன் முதல் தொடங்குகிறது. 3 ஒருநாள் ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7 மணிக்குத் தொடங்குகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →