கோவையில் நடைபெற்று வரும் 55 ஆவது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியன் வங்கி, இந்திய ராணுவ அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இதில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியும், இந்திய விமானப் படை அணியும் மோதின. இதில் இந்தியன் வங்கி அணி 81-77 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய விமானப் படை அணியைத் தோற்கடித்தது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவம் அணி 70-47 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின் வாரிய அணியை வென்றது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியும், இந்திய ராணுவ அணியும் மோதுகிறது. இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், பிஎஸ்ஜி சுழல் கோப்பையும். இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், சுழல் கோப்பையும், முன்றாம் இடம்பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.