ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ஹெட்டிங்லியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியால், ஆஸி. வீரர்களின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
இதனால் 27.5 ஓவர்களிலேயே வெறும் 67 ரன்களுக்குச் சுருண்டது. ஜோ டென்லி மட்டுமே அதிகபட்சமாக 12 ரன்களை எடுத்தார். இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் வந்த வேகத்தில் நடையை கட்டினர். அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹேஸல்வுட் 5-30 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3-23, பட்டின்ஸன் 2-9 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 57 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தை விட 283 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்னும் இந்த டெஸ்ட் போட்டியில் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.