ஃபெடரருக்கு எதிராக விளையாடிக் கவனம் பெற வேண்டும், அந்தத் தனி அனுபவத்தைப் பெறவேண்டும் என்பது எல்லா டென்னிஸ் வீரர்களுக்குமான கனவாக இருக்கும். அந்தக் கனவு இந்திய வீரர் சுமித் நாகலுக்கு திங்கள் அன்று நிறைவேறப்போகிறது.
1998-க்குப் பிறகு இரு இந்தியர்கள் யு.எஸ். ஓபன் முதல் சுற்றில் விளையாடவுள்ளார். பிரஜ்னேஷ் மற்றும் சுமித் நாகல்.
தகுதிச்சுற்றில் பிரேஸிலைச் சேர்ந்த மெனேசெஸை 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் 22 வயது சுமித் நாகல். இதன்மூலம் கடந்த 25 வருடங்களில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தகுதி பெற்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.
திங்கள் முதல் தொடங்கவுள்ள யு.எஸ் ஓபன் போட்டியின் முதல் சுற்றில் 20 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரருடன் மோதவுள்ளார் சுமித் நாகல்.
ஃபெடரருக்கு எதிராக விளையாடிக் கவனம் பெறுவார், தனி அனுபவமும் பெறுவார் நாகல். அதேசமயம் யாரும் எதிர்பாராதவிதமாக அவரை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடிப்பாரா?