முகப்பு
செய்திகள்

இந்தியக் கால்பந்து வளர்ச்சிக்காக இரு திட்டங்களை அறிவித்துள்ள நீதா அம்பானி!

2020-ல் யு-17 மகளிர் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:

ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மண்ட் லிமிடெட் என்கிற எஃப்.எஸ்.டி.எல். மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் நீதா அம்பானி, இந்தியக் கால்பந்து வளர்ச்சி தொடர்பான இரு முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

எஃப்.எஸ்.டி.எல். மூலமாக நான்கு மகளிர் அணிகள் கொண்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளார் நீதா அம்பானி. அதேபோல சிறுவர்களுக்கான கால்பந்து லீக் போட்டியையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். புகழ்பெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை எஃப்.எஸ்.டி.எல். நிறுவனம் நடத்தி வருகிறது. இதனால் இந்த இரு போட்டிகளையும் எஃப்.எஸ்.டி.எல். நிறுவனம் சிறப்பாக நடத்தும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

2020-ல் யு-17 மகளிர் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாவதற்காக மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நோக்கத்துடன், நான்கு மகளிர் அணிகள் கொண்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியை நடத்தவுள்ளார் நீதா அம்பானி. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 100 பள்ளி மாணவிகள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டிக்கு அகில இந்திய கால்பந்து சங்கம் ஆதரவளித்துள்ளது. 

ஹீரோ ஐ.எஸ்.எல். சில்ட்ரன்ஸ் லீக் எனும் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி, இந்தியாவில் கால்பந்து வளர்ச்சிக்கும் அதன் பிரபலத்துக்கும் முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அடுத்த மூன்று வருடங்களில், 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 38,000 பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்கள். முதல் கட்டமாக, மேற்கு வங்கம், அருணாசல பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு போட்டி நடத்தப்படும். 2021-22-ல் 38,000 மாணவர்கள் இப்போட்டியின் பங்கேற்பாளர்களாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. 

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியின் உரிமையாளர்கள் கூட்டத்தில் தனது திட்டங்களை அறிவித்தார் நீதா அம்பானி.

முழு கட்டுரையைப் படிக்க →