தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
5 மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி...
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதியும், புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப்ரல் 9-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 5 மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.
தமிழ்நாட்டுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என மொத்தம் 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் உள்ள 832 தொகுதிகளுக்கு மொத்தம் 1,111 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் நாளை (மார்ச் 18) முதல் முகாமிட்டு தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.