செய்திகள்

காஷ்மீர் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து தான் எங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா?: சானியா மிர்சா ஆவேசம்!

எழில்

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் பேருந்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். புல்வாமாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 40 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்டார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. எனினும் அதில் ஏன் பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்கிற எதிர்வினைகளை எதிர்கொண்டார். இதையடுத்து தன்னை விமரிசனம் செய்பவர்களுக்கு சானியா மிர்சா ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது. 

இந்தத் தாக்குதலுக்குச் சமூகவலைத்தளங்கள் முழுக்கக் கண்டனம் தெரிவித்தால் மட்டும்தான் பிரபலங்களாகிய நாங்கள் தேசப்பற்றுள்ளவர்கள், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கமுடியும் என்று எண்ணுபவர்களுக்காக இதை எழுதுகிறேன். நாங்கள் பிரபலங்கள், ஆனால் உங்களில் சிலர் வெறுப்புக்கு ஆளாகியுள்ள மனிதர்கள், உங்கள் கோபத்தை எங்கு வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் இப்படி வெறுப்பைப் பரப்புகிறீர்களா?

தீவிரவாதத் தாக்குதலுக்கு வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிக்கவேண்டும் அல்லது சமூகவலைத்தளங்களில் உரக்கக் குரல் எழுப்பி நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. கண்டிப்பாக நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்தாம். தீவிரவாதத்தைப் பரப்புபவர்களுக்கும். சரியான மனநிலையில் உள்ள எவரும் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்தாம். அப்படி அவர்கள் இல்லையென்றால் அது அவர்களுடைய பிரச்னை. என் நாட்டுக்காக நான் விளையாடுகிறேன், வியர்வை சிந்துகிறேன், என் நாட்டுக்காக அவ்வாறு பங்களிப்பைச் செலுத்துகிறேன். 

பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் பக்கம் நான் நிற்கிறேன். அவர்களுக்காக மனம் வருந்துகிறேன். நாட்டைக் காப்பாற்றும் அவர்கள் நம்முடைய நிஜக் கதாநாயகர்கள். பிப்ரவரி 14 இந்தியாவுக்குக் கருப்புத் தினமாகும். அதுபோன்ற இன்னொரு தினத்தை நாம் காணக்கூடாது என எண்ணுகிறேன். எவ்விதமான இரங்கல்களும் இதற்குப் போதாது. இந்த நாளை மறக்கமுடியாது, அதேபோல மன்னிக்கவும் முடியாது. நான் இப்போதும் அமைதிக்காகத்தான் வேண்டுகிறேன். நீங்களும் வெறுப்பைப் பரப்புவதற்குப் பதிலாக அதைச் செய்யவேண்டும். உபயோகமாக ஒன்றைச் செய்வதற்குத்தான் கோபம் நல்லது. நபர்களைக் கிண்டலடிப்பதால் நீங்கள் ஒன்றும் அடையப்போவதில்லை. இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை, இடமிருக்கப் போவதில்லை. 

உட்காந்துகொண்டு பிரபலங்கள் இந்தக் கொடுமையான சம்பவத்துக்கு எதிராக எத்தனை பதிவுகள் எழுதியுள்ளார்கள் எனச் சபித்துக்கொண்டும் மதிப்பீடு செய்வதை விடவும் நாட்டுக்காக எப்படிச் சேவை செய்யமுடியும் என்பதற்கான வழிகளைக் காணுங்கள். சிறிய அளவிலாவது ஏதாவது செய்யுங்கள், நாங்கள் அதைச் சமூகவலைத்தளங்களில் அறிவிக்காமல் செய்துகொண்டிருக்கிறோம் என்று ஆவேசமாகத் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான  சோயிப் மாலிக்கை 2010-ல் திருமணம் செய்தார் சானியா மிர்சா.  32 வயதான சானியா இறுதியாக கடந்த 2017 அக்டோபர் மாதம் சீன ஓபன் போட்டியில் ஆடினார். அப்போது கால்மூட்டில் காயமுற்றதால், ஓராண்டுக்கு மேலாக ஆட முடியவில்லை. மேலும் கடந்த 2018 அக்டோபர் மாதம் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தீவிரமாக டென்னிஸ் ஆட்டத்தில் கவனத்தை செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT