ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. இதனால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைத் திட்டங்களில் ரிஷப் பந்த் நிச்சயம் உள்ளார் என உறுதியாகக் கூறியுள்ளார் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாந்த். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் மூன்று டி20களும் 4 டெஸ்டுகளும் விளையாடினார். இதனால் அவர் சோர்வடைந்துள்ளார். அவருக்கு முழுமையான இரு வார ஓய்வு தேவைப்படுகிறது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஏ அணி விளையாடவுள்ள தொடரில் அவர் எத்தனை ஆட்டங்கள் விளையாட வேண்டும் என்று தீர்மானிப்போம். நேரடியாகவே சொல்கிறேன். எங்களுடைய இந்திய அணிக்கான உலகக் கோப்பைத் திட்டங்களில் நிச்சயம் அவர் உள்ளார். மிகச்சிறந்த வீரராக அவர் உருவாகி வருகிறார். தன்னுடைய திறமையை அறியாதவராக அவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.