மலிங்காவுக்கு அடுத்ததாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் மற்றொரு இலங்கை வேகப்பந்துவீச்சாளர்!
2017 ஜூலைக்குப் பிறகு இலங்கை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை...
இலங்கையின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. வரும் ஜூலை 26-ஆம் தேதி மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அந்த ஆட்டத்தில் பங்கேற்ற பின் ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விலக உள்ளார் மலிங்கா.
இந்நிலையில் மலிங்காவுக்கு அடுத்ததாக, மற்றொரு இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகராவும் ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
37 வயது குலசேகரா, இலங்கை அணிக்காக 21 டெஸ்டுகளிலும் 184 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2017 ஜூலைக்குப் பிறகு இலங்கை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 2014-ல் இலங்கை அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது இவர் முக்கியப் பங்கு வகித்தார்.