முகப்பு
செய்திகள்

வெற்றியுடன் விடைபெற்றார் மலிங்கா

வங்கதேசத்துடனான முதல் ஒருநாள் போட்டியுடன் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து வெற்றியுடன் ஓய்வு பெற்றார்.

Updated On : 27 ஜூலை, 2019 at 10:46 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:09 PM

வங்கதேசத்துடனான முதல் ஒருநாள் போட்டியுடன் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஒருநாள் போட்டிகளில் இருந்து வெற்றியுடன் ஓய்வு பெற்றார். வங்கதேசத்துடனான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2011-இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

35 வயதான மலிங்கா, இலங்கை அணிக்கு 225 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முத்தையா முரளிதரன் 523, சமிந்தா வாஸ் 399 ஆகியோருக்கு ஆடுத்து மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 338 விக்கெட்டுகளுடன் தற்போது 9-ஆவது இடத்தில் உள்ளார்.

கடந்த 2007 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு உரியவர். மேலும் கொழும்புவின் பிரேமதாஸா மைதானத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்தார்.

Advertisement

கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வருகிறேன். ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற இதுவே சரியான தருணம். எனினும் டி20 ஆட்டங்களில் தொடர்ந்து ஆட விரும்புகிறேன்.  ஆஸ்திரேலியாவில் வரும் 2020 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் பங்கேற்று ஆடுவேன். 

இரண்டு ஆண்டுகளாக என்னை அணியில் இருந்து ஓரம் கட்டினர். எனினும் யார் மீதும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மீண்டும் திறமையை நிரூபித்து அணியில் இடம் பிடித்தேன். டி20யில் என்னை விட சிறந்த வீரர்கள் இருந்தால், நான் விலகவும் தயாராக உள்ளேன் என்று மலிங்கா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.