உலக மகளிர் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான நியூஸிலாந்தின் ஜோயல் கிங்கை சந்திக்கிறார்.
எகிப்தில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில் உலகின் 16-ஆம் நிலையில் உள்ள ஜோஷ்னாவும், 6-ஆம் நிலையில் உள்ள இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரியும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஷ்னா 11-4, 6-11, 14-12, 11-9 என்ற செட்களில் வெற்றி பெற்றார். இது, கடந்த 7 ஆண்டுகளில் சாராவுக்கு எதிராக ஜோஷ்னா பதிவு செய்யும் முதல் வெற்றியாகும். முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை ஓபன் போட்டியின்போது சாராவை ஜோஷ்னா தோற்கடித்திருந்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் கேமில் ஜோஷ்னா ஆக்ரோஷம் காட்டினார். அடுத்த செட்டில் சாரா மீண்டு வந்தார். எனினும் அடுத்தடுத்த கேம்களில் ஜோஷ்னா தனது ஆதிக்கத்தை செலுத்தி ஆட்டத்தை தன் வசமாக்கினார்.