2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெறவுள்ளதாக தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஜீன் பால் டுமினி அறிவித்துள்ளார்.
ஆல்ரவுண்டரான டுமினி கடந்த 2017-இலேயே டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.. இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு பின்தான் ஒரு நாள் ஆட்டங்களில் ஓய்வு பெற தீர்மானித்துள்ளேன். எனினும் டி20 ஆட்டங்களில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுமினி கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக எனது ஆட்டத்திறனை மறு ஆய்வு செய்தேன். எதிர்காலத்தில் நிறைவேற்ற சில குறிக்கோள்கள் உள்ளன. ஓய்வு பெறுவது என்ற முடிவு மிகவும் கடினமானதாகும். இளைய தலைமுறைக்கு வழிவிட இது சரியான தருணம். ஓய்வு பெற்ற பின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். இதுநாள் வரை எனக்கு ஆதரவு தந்த அணி வீரர்கள், நிர்வாகம், ரசிகர்களுக்கு நன்றி என்றார்.
193 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ள டுமினி மொத்தம் 5047 ரன்களை குவித்துள்ளார். 68 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். கடந்த 2011, 2015 உலகக் கோப்பைகளிலும் பங்கேற்றார் அவர்.
ஏற்கெனவே மூத்த வீரர் இம்ரான் தஹிரும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.