மயங்க் அகர்வால், புஜாரா அபார ஆட்டம்: 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 188/3
2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்தியப் பந்துவீச்சாளா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 26 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்திருந்தது.
மயங்க் அகர்வாலும் புஜாராவும் மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய நாளை தொடங்கினார்கள். 68 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் புஜாரா. எனினும் இன்று, நன்கு விளையாடி வந்த புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இந்த டெஸ்டில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா நேற்று 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல விராட் கோலியும் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு பந்துகள் மட்டும் எதிர்கொண்டு டக் அவுட் ஆனார். டிஆர்எஸ் முறையில் அவரை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் பந்துவீச்சாளர் அபு ஜெயத்.
Advertisement
இதன்பிறகு மயங்க் அகர்வாலும் ரஹானேவும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். மயங்க் அகர்வால் 98 பந்துகளில் அரை சதமெடுத்தார்.
2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 91, ரஹானே 35 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.