இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் 2-வது இன்னிங்ஸில் வங்கதேச அணி 69.2 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் நவம்பர் 22 அன்று தொடங்குகிறது.
மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்தபோது இரட்டைச் சதம் அடிக்கவேண்டும் என அன்புக்கட்டளையிட்டார் விராட் கோலி. அதேபோல கேப்டனின் விருப்பத்தை நிறைவேற்றினார் மயங்க் அகர்வால். இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இதுகுறித்து கோலி பேசியதாவது:
அடுத்தத் தலைமுறையினரை ஊக்கப்படுத்த விரும்புகிறோம். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துகிறோம். ஓர் இளம் வீரர் அணிக்குள் வரும்போது, பெரிய சதங்களை எடுக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என எனக்குத் தெரியும். அதன் முக்கியத்துவம் தெரியும். எனவே (சதமடித்த பிறகும்) தொடர்ந்து விளையாடுவதன் பொறுப்பை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். இளம் வயதில் நான் செய்த தவறுகளைச் செய்யாமல் உலகத் தரமான கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் வளர வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.