முகப்பு
செய்திகள்

டி20: இலங்கை அணியை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றுள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2019 at 4:44 PM
பகிர்:

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த அணி ஆஸி.யின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. விக்கெட் கீப்பர் குசால் பெரேரா அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 19 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி. அணியில் ஸ்டேன்லேக், கம்மின்ஸ், அகர், ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் டி20 ஆட்டத்தில் 99 ரன்கள் மட்டும் எடுத்த இலங்கை அணி, 2-வது டி20 ஆட்டத்தில் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்த எளிதான இலக்கை 13 ஓவர்களில் அடைந்தது ஆஸ்திரேலிய அணி. கேப்டன் ஃபிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த வார்னர் - ஸ்மித் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆஸி. அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. ஆஸி. அணி 13 ஓவர்கள் 1 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து 2-வது டி20 ஆட்டத்தை வென்றதோடு டி20 தொடரையும் வென்றது. வார்னர் 60, ஸ்மித் 53 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

Advertisement

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் வெள்ளியன்று மெல்போர்னில் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.