செய்திகள்

மீண்டும் பேட்டிங்கில் திணறும் இங்கிலாந்து: முதல் நாளில் 271/8

DIN


கடைசி ஆஷஸ் டெஸ்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜோ டென்லி களமிறங்கினர். சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்த ஜோ டென்லி 14 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பர்ன்ஸ் மற்றும் கேப்டன் ரூட் பாட்னர்ஷிப் அமைத்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. முதலில் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த கேப்டன் ஜோ ரூட் இந்த முறையும் சதம் அடிக்காமல் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் (22), சாம் கரண் (15), கிறிஸ் வோக்ஸ் (2) ஆகியோரை மிட்செல் மார்ஷ் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், அந்த அணி 205 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

எனினும், ஜோஸ் பட்லர் டெயிலண்டர்கள் துணையோடு அதிரடிக்கு மாறினார். அது அவருக்குப் பலனளிக்க அரைசதத்தைக் கடந்தார். இதனால், இங்கிலாந்து அணியும் 250 ரன்களைக் கடந்தது. 

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 64 ரன்களுடனும், ஜேக் லீச் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 

ஜோஸ் பட்லர் நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 300 ரன்களைக் கடக்க வைத்தால், முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் இங்கிலாந்து அணி பின்னடைவைச் சந்திக்காமல் இருப்பதற்கு அது உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT