உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் கவிந்தர் சிங் பிஷ்ட் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.
இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கவிந்தர் சிங்கும்-சீனாவின் செனா ஸிஹாவோவும் மோதினர். போட்டி கடுமையாக இருந்த நிலையில், இறுதியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் கவிந்தர் சிங் வென்றார். கடந்த 2017 ஹாம்பர்க் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய கவிந்தர், இந்த முறை பதக்கம் வெல்பவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
சீன வீரர் முகம் முழுவதும் ரத்தம் வடிந்த நிலையில் வெளியேறினார்.இந்த வெற்றி மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் கவிந்தர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கட்டுப்பாட்டில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.